பதிவு செய்த நாள்
21
மே
2024
10:05
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாளை வைகாசி விசாக விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
சென்னை, வடபழனியில் அமைந்துள்ளது ஆண்டவர் கோவில். முருகன் கோவில்களில் தொன்மையான தென்பழனிக்கு நிகராக இக்கோவில் புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றும் தலமாகவும் திகழ்கிறது. இக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு,10 நாள் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவில் நேற்று குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வைகாசி விசாகமான, நாளை 22ம் தேதி காலை 9:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் விதிஉலா நடக்கிறது. காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில்வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. பின், சுப்பிரமணியவர் வீதி உலாவினை அடுத்து துவஜ அவரோஹணம் எனும் கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. வரும், 23ம் தேதி இரவு விசேஷ புஷ்ப பல்லக்கு புறப்பாடு, சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. வைகாசி விசாக பிரம்மோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் வரும், 24ம் தேதி முதல் ஜூன், 2ம் தேதி வரை தினமும் மாலை நடக்கிறது. இதில், பரதநாட்டியம், சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, வீணை கச்சேரி, இசை சொற்பொழிவு ஆகியவை நடக்கின்றன.