பதிவு செய்த நாள்
21
மே
2024
03:05
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நத்தம், வில்பட்டியில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் -செண்பகவல்லி அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலின் வைகாசி பெருந்திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் அம்மன் சிம்மம், மயில்,பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி கோவில்பட்டி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக வந்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் நேற்று கைலாசநாதர் - சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலையில் 9.15 மணிக்கு அதிர்வேட்டுக்கள் முழங்க, சிவாச்சாரியர்களின் மந்திரங்கள் முழங்க தொடங்கியது. இதில் திருத்தேர் வர்ண பூமாலைகளாலும்,வண்ண துணிகளாலும் அலங்கரிங்கபட்டு இருந்தது. இந்த தேரில் கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் எழுந்தருளி கோவில்பட்டி, அக்ரஹாரம் வழியாக நகர்வலமாக கோவிலை வந்தடைந்தது. வழிநெடுக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரின் வடங்களை பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து நாளை பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும், நாளை உற்சவ சாந்தி விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.முன்னதாக தேரோட்ட விழாவில் இந்துசமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பாரதி,செயல் அலுவலர் பால சரவணன் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.