பதிவு செய்த நாள்
22
மே
2024
07:05
பழநி; பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்ட பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக விழாவில் மே 16, காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று (மே,21 ல்) யாக பூஜைகளுடன் மூலவர், உற்ஸவருக்கு வள்ளி தேய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.இதில் அமிர்தலிங்கம் குருக்கள், செல்வசுப்ரமணியம் குருக்கள், கண்காணிப்பாளர் அழகர்சாமி பங்கேற்றனர். திரளாக பங்கேற்ற பக்தர்கள் அரோகரா என பத்தி பரவசத்தில் வழிபட்டனர். இன்று வைகாசி விசாகம் (மே 22,ல்) காலை தோளுக்கினியானில் சுவாமி எழுந்தருளி திருதேரேற்றம் நடைபெறும், மாலை 4:30 மணிக்குமேல் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. விழா நாட்களில் காலையில் தந்த பல்லாக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மாலையில் தங்க மயில், காமதேனு ஆட்டுக்கடா,வெள்ளி யானை, வெள்ளி மயில், தங்கக்குதிரை வாகனங்களில் விழா நாட்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. பத்தாம் நாள் மே.25ல் காலை திரு ஊடல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு கொடி இறக்குதலுடன் உற்ஸவம் நிறைவு பெறும்.