கட்டிக்குளத்தில் ஓலைப்பட்டியில் அம்மனுக்கு அசைவ உணவு படைத்து வினோத வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2024 03:05
மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளத்தில் கிராம ஒற்றுமைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் பாரம்பரிய முறைப்படி ஓலைப்பெட்டியில் அசைவ உணவு வகைகளை ஊர்வலமாக கொண்டு வந்து அம்மனுக்கு படைத்து கட்டிக்குளம் கிராம மக்கள் வினோத வழிபாடு செய்தனர்.
மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள அழகிய சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வருடம் தோறும் வைகாசி மாதம் கிராம மக்களின் ஒற்றுமைக்காகவும்,நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் பாரம்பரிய முறைப்படி தங்களது வீடுகளில் சமைக்கப்பட்ட ஆடு,கோழி,மீன், கருவாடு,முட்டை மற்றும் கொழுக்கட்டை ஆகியவற்றை ஓலை பெட்டிகளில் வைத்து ஊரை சுற்றி ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து அங்கு ஓலைப்பட்டியில் விளக்கேற்றி அம்மனுக்கு படைத்து கிராம பெண்கள் குலவையிட்டு பாட்டு பாடி அம்மனை வேண்டி வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து கோயில் பூசாரி படையல்களை பிரித்து அம்மனுக்கு எடுத்து வைத்த பின்னர் கிராம மக்கள் மற்றும் பெண்கள் தங்களது குடும்பத்தினரோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். இந்த விழாவிற்காக வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வருகை தந்து சவுந்தரநாயகி அம்மனை வழிபட்டு சென்றனர்.