நாச்சியார் திருக்கோலத்தில் வலம் வந்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2024 11:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலையில் தங்க சப்பரத்திலும், மாலை சிம்ம வாகனத்திலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி உலா வந்தார். இரண்டாம் நாள் உற்சவமான, கடந்த 21ம் தேதி காலையில், ஹம்ஸ வாகனத்திலும், மாலை சூரிய பிரபையிலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி உலா வந்தார். மூன்றாம் நாள் உற்சவமான கடந்த 22ம் தேதி காலை கருடசேவை உற்சவமும், மாலை ஹனுமந்த வாகன உற்சவமும் நடந்தது. இதில், நான்காம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை சேஷ வாகனமும், மாலை சந்திர பிரபை வாகனமும் நடந்தது. ஐந்தாம் நாள் உற்சவமான நேற்று காலை வரதராஜ பெருமாள், நாச்சியார் திருக்கோலத்தில், தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டனர். இரவு யாளி வாகன உற்சவம் நடந்தது. ஏழாம் நாள் உற்சவமான நாளை காலை தேரோட்டமும், 28ம் தேதி காலை, அனந்தசரஸ் தெப்பகுளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது.