பதிவு செய்த நாள்
27
மே
2024
11:05
மீஞ்சூர்: வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப்பெருமாள் திருக்கோவில், பிரம்மோற்சவம் கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சூர்ய பிரபை, சந்திர பிரபை, கருடசேவை, அனுமந்த வாகனம், கேடய புறப்பாடு, நாகவாகனம், ஆளும் பல்லக்கு, ஹம்ச வாகனம், திருக்கல்யாணம், யானை வாகனம் என, தினமும் காலை, மாலையில் உற்சவங்கள் நடந்தன. பிரம்மோற்சவத்தின், ஏழாம் நாளான நேற்று, ரத உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. வண்ண மலர்கள், துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மரத்தேர், காலை, 8:00 மணிக்கு வாண வேடிக்கை, மங்கள இசையுடன் நிலையில் இருந்து புறப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி உடன் உற்சவ பெருமான், 43 அடி மரத்தேரில் வீற்றிருந்தார். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பியபடி, பக்தி பரவசத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்து சென்றனர். மாடவீதிகள் வழியாக திருவீதி உலா வந்த வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார். பக்தர்களுக்காக, தன்னார்வலர்கள் குளிர்பானம், மோர் மற்றும் உணவு பொருட்களை வழங்கினர். மின்வாரியம், காவல், தீயணைப்பு ஆகிய துறையினர் தேர் சென்ற மாடவீதிகளில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மீஞ்சூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, பக்தர்கள் திரளாக பங்கேற்று, பெருமாளை வழிபட்டனர்.