பதிவு செய்த நாள்
29
மே
2024
03:05
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அக்னி தோஷ நிவர்த்தி பூஜை நடந்தது.
அக்னி நட்சத்திரம் கடந்த, 4ல், தொடங்கி நேற்று வரை இருந்தது. இக்காலத்தில் வெப்பம் கடுமையாக இருக்கும். இந்த நாட்களில், இறைவனை குளிர்விக்கவும், எல்லா ஜீவராசிகளை பாதுகாக்க வேண்டியும், கோடையின் தாக்கம் குறைந்து, போதிய மழை பெய்ய வேண்டியும், தோஷ நிவர்த்திக்காக சிவன் கோவில்களில், உச்சிகால அபிஷேக பூஜை நடக்கும் நேரமான, 11:30 மணிக்கு தொடங்கி, சாயரட்சை பூஜை நடக்கும் நேரமான, மாலை 6:00 மணி வரை தாரா அபிஷேகம் நடக்கும். அதன்படி அருணாசலேஸ்வரர் கோவிலில், பன்னீர், விளாமிச்சை வேர், பச்சை கற்பூரம், வெட்டிவேர், ஏலக்காய், ஜாதிக்காய், ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை தாரா பாத்திரத்தில் ஊற்றி, அதை மூலவர் லிங்கம் மீது சொட்டு சொட்டாக விழும்படி, தாரா அபிஷேகம் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று, 28 ல் அக்னி நட்சத்திரம் நிறைவுறுவதையொட்டி கடந்த, 26 ல் மாலை அக்னி தோஷ நிவர்த்தி, 1,008 கலசாபிஷேக, முதல்கால பூஜை தொடங்கியது. இதில் கணபதி பூஜை உள்ளிட்ட பூஜை நடந்தது. தொடர்ந்து, 2, 3 மற்றும் 4ம் கால பூஜை நடத்தப்பட்டு, நேற்று காலை, 11:00 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்ட, 1,008 கலச புனித நீரை கொண்டு, அருணாசலேஸ்வரருக்கு அக்னி தோஷ நிவர்த்தி கலசபாபிஷேகம் நடந்தது. இரவு ரிஷப வாகனத்தில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் மாடவீதி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.