பதிவு செய்த நாள்
31
மே
2024
02:05
பாகல்கோட்; நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டி, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர், பாகல்கோட்டில் இருந்து அயோத்தி வரை இரண்டு மாதங்கள் பாதயாத்திரையாக பயணித்து, பாலராமரை தரிசனம் செய்துள்ளார்.
நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான இறுதி கட்ட ஓட்டுப்பதிவு, நாளை நடக்கிறது. ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பாகல்கோட் மாவட்டம், இளகல்லை சேர்ந்தவர் முத்து கரமுடி, 25. ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரான இவர், ராம பக்தர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசால், சர்வதேச அளவில் நம் நாடு பேரும், புகழும் பெற்றது. இதை மனதில் வைத்து, மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வேண்டும் என்று முத்து நினைத்தார். இதற்காக, கடந்த ஏப்., 1ம் தேதி இளகல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பாதயாரத்திரையாக அயோத்தி ராமர் கோவிலுக்கு புறப்பட்டார். தன்னுடன் பேக் ஒன்றை மட்டும் சுமந்து கொண்டு சென்றார். தினமும் 40 முதல் 60 கி.மீ., பயணித்தார். இரவு நேரத்தில் ஓய்வெடுத்தார். இவர் செல்லும் வழியில், இவரின் செயலை பாராட்டி, பொது மக்கள் தாமாக முன்வந்து உணவு வழங்கினர். இரவு நேரத்தில் அவர் தங்குவதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். இரண்டு மாதங்களில், 2,000 கி.மீ., பயணித்து, அயோத்தி சென்றடைந்த அவர், பாலராமரை தரிசனம் செய்தார்.