பதிவு செய்த நாள்
31
மே
2024
02:05
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் வைகாசி விழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் மாடகோட்டை ஸ்ரீ முனீஸ்வரர் கோயில் வைகாசி விழா, மே 23 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விழா நடைபெறுவது வழக்கம். கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் தொடர்ச்சியாக மே 30ல் பூத்தட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில், முக்கிய விழாவான பூக்குழி விழா, இன்று காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் சாத்தமங்கலம் விநாயகர் கோவிலில் இருந்து, விழா குழு தலைவரும், சென்னை மாநகராட்சி கணக்கு மற்றும் நிதி குழு தலைவருமான தனசேகரன் தலைமையில், பக்தர்கள் சுமார் இரண்டு கி.மீ., தொலைவு மங்கல இசை முழங்க காவடி, பறவை காவடி, பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். தொடர்ந்து, கோயில் முன்பு பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பின்பு மூலவருக்கு நடைபெற்ற பாலபிஷேகத்திலும், சிறப்பு தீப ஆராதனையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.