காவி உடை.. நெற்றியில் விபூதி பட்டையிடன் பிரதமர் மோடி தொடர்ந்து தியானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2024 04:05
நாகர்கோவில்; கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி காவி உடை அணிந்து தொடர்ந்து தியானம் செய்து வருகிறார்.
கன்னியாகுமரிக்கு நேற்று வந்த பிரதமர் நரேந்திர மோடி பகவதி அம்மனை தரிசித்த பின்னர் தனி படகில் விவேகானந்தர் பாறைக்கு சென்றார். அங்கு அன்னை சாரதா தேவி, ஸ்ரீ ராமகிருஷ்ணர் படங்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் சுவாமி விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையில் நின்றபடி பார்வையிட்டார். இரவு சிறிது நேரம் தியானத்துக்கு பின்னர் பிரதமருக்காக தயார் செய்யப்பட்டிருந்த அறையில் ஓய்வெடுத்தார்.
இன்று அதிகாலை 4:00 மணிக்கு எழுந்த பிரதமர் மோடி குளித்து காவி உடை அணிந்து நெற்றியில் விபூதி பட்டை போட்டு அதன் நடுவில் குங்குமம் வைத்தார். பின்னர் கையில் ருத்திராட்ச மாலையை விரலால் உருட்டியபடி விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி வந்தார். தொடர்ந்து 6:00 மணிக்கு சூரிய நமஸ்காரம் செய்து இரண்டு கைகளையும் மேலே தூக்கி சூரிய பகவானை வணங்கினார்.பின்னர் சிறிய சொம்பில் இருந்த தீர்த்தத்தை கடலில் ஊற்றினார். இது கங்கை தீர்த்தம் என்று கூறப்பட்டது. இதை முடித்துக் கொண்டு விவேகானந்தர் மண்டபத்தின் உள்ளே உள்ள விவேகானந்தர் சிலையின் முன்பு எதிரே சம்மனமிட்டு தரையில அமர்ந்த பிரதமர் தியானத்தில் ஈடுபட்டார். அப்போது மண்டபத்தில் மனதுக்கு இதமான ஓம் என்ற பிரணவ மந்திரம் ஆடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது.தியானத்தின் போது பிரதமர் மவுன விரதமும் மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது .அவர் தனக்குத் தேவையானவற்றை சைகை மொழியில் பேசுவதாக தெரியவந்துள்ளது.
பிரதமரின் தியானம் இன்னும் தொடர்கிறது. அவர் நாளை மதியத்துக்கு பின்னர் கரை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . வரும் வழியில் அவர் திருவள்ளுவர் சிலைக்கு சென்று வணங்குகிறார். அதன் பின்னர் விருந்தினர் மாளிகைக்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தல் படி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இன்று காலை வழக்கம் போல் 8:00 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. பயணிகளின் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு அவர்களுடைய உடமைகள் அனைத்தும் வாங்கப்பட்ட பின்னர் விவேகானந்தர் பாறை செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் அலைபேசி மட்டும் வழங்கப்பட்டது. எனினும் 11:30 மணி வாக்கில் படகு சேவை நிறுத்தப்பட்டது. பிரதமர் விவேகானந்தர் பாறையில் உள்ளதால் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது . பிரதமர் அலுவலகத்தில் இருந்து மக்களை அனுமதிக்க கூறினாலும் பாதுகாப்பு விஷயம் மாநில அரசின் பொறுப்பில் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடற்கரையில் உள்ள காந்தி மற்றும் காமராஜர் மண்டபத்துக்கு செல்லவும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது இதனால் ரோடுகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. இதனால் கடைகளை திறந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர் அதுபோல கடற்கரையொட்டி உள்ள தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்யப்பட்டிருந்த அறைகளும் போலீஸ் கெடுபடியால் ரத்து செய்யப்பட்டது.