நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம்; மேற்கூரை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2024 04:05
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு மேற்கூரை சுத்தப்படுத்தும் பணியில் கோயில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ‘திருநெல்வேலி’ எனப் பெயர் வரக்காரணமாக அமைந்த நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம் மிகவும் சிறப்பானது. இக் கோயிலில் ஜூன் 13ம் தேதி கொடியேற்றத்துடன் ஆனித் தேர் திருவிழா துவங்குகிறது. 21ம் தேதி ஆனித் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளில் கோயில் அறங்காவலர் குழு, கோயில் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே கோயிலில் 8 வெள்ளி வேய்ந்த மர வாகனங்கள் புதுப்பிக்கும் பணிகள் ரூ.19லட்சம் செலவில் நடந்துவருகிறது. இதுதவிர சுவாமி தேர், அம்பாள் தேர் அலங்கார தட்டிகள் பழுது அடைந்ததை புதிதாக மாற்றும் பணிகள் கோயில் நிதியில் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர நெல்லையப்பர் சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி நுழைவு வாயில் மேற்கூரைகள் சுத்தப்படுத்தும் பணியில் சிவ தொண்டர்கள், கோயில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.