பதிவு செய்த நாள்
31
மே
2024
05:05
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடம் உள்ளது. ஆதீனத்தின் 24வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். குருமகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர நாளான (வைகாசி பூரட்டாதி) இன்று திருமடத்தில் யாகங்கள் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதையொட்டி ஆதீன திருமடத்தில் உள்ள நமச்சிவாய மூர்த்தி, நடராஜர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன. கோமுதீஸ்வரர் கோவிலில் குருமகா சன்னிதானம் முன்னிலையில் சிறப்பு பூஜை, ருத்ராபிஷேகம் நடைபெற்றது. மதியம் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது.
விழாவின் ஒரு பகுதியாக, நமச்சிவாய மூர்த்திகள் சந்நிதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி(மூலம்) என்ற நூலையும், பூசை. ஆட்சிலிங்கம் தொகுத்தளித்த சிவயோக சாதனையாளர் பெருமிழலைக்குறும்பர் என்ற நூலையும் குருமகா சன்னிதானம் வெளியிட்டார். தொடர்ந்து ஸ்தபதிகள் திருக்கடையூர் அய்யப்பன், கும்பகோணம் வெங்கடேசன், சிவகணேசன் ஆகியோரின் திருக்கோயில் திருப்பணிகளை பாராட்டியும், சென்னை முகவரி பவுண்டேசன் ரமேஷ், மாற்றம் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த குமார் ஆகியோரின் சமுதாய திருப்பணிகளை பாராட்டியும் விருதுகள், தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி ஆகியவற்றை ஆதீன குருமகா சன்னிதானம் வழங்கி ஆசி அருளினார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழாவையொட்டி காரைக்கால் தனியார் மருத்துவக் கல்லூரி சார்பில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மாலை ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. ஜென்ம நட்சத்திர விழாவை முன்னிட்டு குருமகா சன்னிதானம் திருமடத்திற்கு வந்த பக்தர்களுக்கு விருந்தளித்து, செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பினார்.