பதிவு செய்த நாள்
01
ஜூன்
2024
08:06
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், பக்தர்கள் மலை ஏறுவதற்கான அனுமதி நேற்றுடன் நிறைவடைந்தது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தென் கையிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர், பக்தர்களுக்கு கடந்த, பிப்., 12ம் தேதி முதல் அனுமதி அளித்திருந்தனர். தொடர்ந்து, மூன்றரை மாதங்களுக்கு மேலாக, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து, ஏழு மலை ஏறி, சுயம்புவாக உள்ள ஈசனை தரிசித்து வந்தனர். இந்த மூன்றரை மாதங்களில், சுமார், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி வந்துள்ளனர். மலை ஏறிய பக்தர்கள் விட்டு சென்ற, 2.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினர் அகற்றி உள்ளனர். இந்தாண்டு, மலையேறி சுவாமியை தரிசிக்க வந்த பக்தர்கள், 9 பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில், வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கான அனுமதி நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, நேற்று மாலை, வனத்துறையினர் மலைப்பாதையின் துவக்கத்தில் உள்ள இரும்பு கேட்டை பூட்டி, மலையேற அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை வைத்தனர்.