பதிவு செய்த நாள்
01
ஜூன்
2024
10:06
வில்லிவாக்கம்; வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவிலில் நேற்று, கருட சேவை உற்சவம் நடந்தது.
வில்லிவாக்கத்தில் உள்ள, சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும், சுவாமி தாமோதர பெருமாள் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். மூன்றாவது நாளான நேற்று காலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், காலை 6:00 மணிக்கு, உற்சவர் சவுமிய தாமோதர பெருமாள் கருட வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், வாஹன மண்டபத்தில் இருந்து, சன்னிதி தெரு வழியாக, கிழக்கு மற்றும் தெற்கு மாடவீதிகள், பாலியம்மன் கோவில் கடந்து, வடக்கு மாடவீதி வழியாக வீதியுலா வந்தார். மாலை, சூரிய பிரபை உற்சவமும் நடந்தது. இன்று காலை கோடயம் உற்சவமும், மாலை சேஷ வாகன உற்சவத்திலும் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். தொடர்ந்து, ஜூன் 7ம் தேதி வரை உற்சவம் நடக்கிறது.