பதிவு செய்த நாள்
06
ஜூன்
2024
06:06
பல்லடம்; பல்லடம் அருகே, பிரத்யங்கிரா தேவி கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, பில்லி, சூனியம் பயம் போக்கும் நிகும்பலா ஹோமம் நடந்தது.
பல்லடத்தை அடுத்த, வெங்கிட்டாபுரம் ஸ்ரீஅதர்வண பத்ரகாளி பீடத்தில், 16 அடி உயரத்துடன் ஸ்ரீபிரத்தியங்கரா தேவி அருள்பாலிக்கிறார். இன்று அமாவாசையை முன்னிட்டு இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. முன்னதாக, நேற்று ஸ்ரீமங்கள மகா சண்டி ஹோமம் நடந்தது. நேற்று காலை, அமாவாசை சிறப்பு வழிபாடுகள் துவங்கியது. பித்ரு சாபம், கடன் பிரச்னை, எதிரிகள் தொல்லை, கண் திருஷ்டி, கொடிய வியாதிகள், பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகளை போக்கும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி நிக்கும்பலா ஹோமம் நடந்தது. அதர்வண பத்ரகாளி பீடாதிபதி சப்தகிரி சுவாமிகள் ஹோமத்தை நடத்தி வைத்தார். வரமிளகாய் சங்கல்பம் செய்து நடந்த இந்த ஹோமத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். விநாயகர், முருகன், சனிபகவான் ஆகிய பரிபார தெய்வங்களைத் தொடர்ந்து, மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீபிரத்யங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.