தேவகோட்டை; தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்தின் சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவிலும் , குங்கும காளியம்மன் கோவில் உள்ளது. குங்கும காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த மே 29 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. எட்டு தினங்களும் குங்கும காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஒன்பதாம் நாளான நேற்று மாலை குங்கும காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீற்றிருக்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்தவுடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருவிழா நிகழ்ச்சியில் தினமும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.