நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட விநோத திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2024 07:06
நத்தம், நத்தம் கருத்தலக்கம்பட்டி புதூர் வடகாட்டான் சுவாமி கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடாய் வெட்டு அன்னதான விழாவில் ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர்.
கருத்தலக்கம்பட்டி புதூர் வடகாட்டான் சுவாமி கோவில் திருவிழா 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும், பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் இந்த வருட திருவிழா கடந்த மே.28 காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் வடகாட்டான் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 200-க்கும் மேற்பட்ட கிடாய்கள் பலியிடப்பட்டு பெரிய அண்டாக்களில் சமைத்தனர்.தொடர்ந்து சாப்பாட்டுடன் ஆட்டுகறிக்குழம்பும், கறியுடன் அசைவ அன்னதானமாக வழங்கப்பட்டது.இதில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று கறி விருந்து அன்னதானத்தை பெற்று சென்றனர். பின்னர் வாணவேடிக்கைகள், தீவட்டி பரிவாரங்களுடன் மேளதாளம் முழங்க சுவாமி ஊர்வலமாக முத்தாலம்மன் கோவிலை சென்றடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கருத்தலக்கம்பட்டி, க.புதூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.