பதிவு செய்த நாள்
07
ஜூன்
2024
11:06
திருச்செந்துார்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்துஅறுபடை வீடு ஆன்மிக பயணத்திற்கு 202 பக்தர்கள் இன்று புறப்படுகின்றனர். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முருகப் பெருமானின் அறுபடை வீடு ஆன்மிக பயணத்திட்டமானது தங்கும் இடம், உணவு வசதியுடன் இலவச பயணமாக 60 முதல் 70 வயதுக்குட்ட பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதத்திலும், இரண்டாம் கட்டமாக கடந்த மார்ச் மாதத்திலும், தற்போது மூன்றாம் கட்டமாக இன்று (ஜூன் 7) திருச்செந்துாரில் இருந்து ஆன்மிக பயணம் தொடங்குகிறது. இந்த பயணத்தில் மதுரை, சிவகங்கை, நெல்லை மற்றும் துாத்துக்குடி மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 202 பக்தர்கள் அறநிலையத்துறை அலுவலர்கள் உட்பட 40 பேர் என மொத்தம் 242 பேர் 5 பஸ்களில் பயணிக்கின்றனர். மேளதாளம் முழங்க வரவேற்பு: இதை முன்னிட்டு நேற்று மாலை ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயிலில் மேள, தாளம் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கோயிலில் நேர் வழியில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு தரிசனம் செய்தனர். சண்முக விலாசம் மண்டபத்தில் வைத்து பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதப்பையை இணை ஆணையர் கார்த்திக் வழங்கினார். நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர்கள் ரவீந்திரன், வெங்கடேஸ்வரன், சீதாலட்சுமி,
கோமதி, அஜித், வேதமூர்த்தி, ராமமூர்த்தி, செந்தில்வேல்முருகன், விஜயலட்சுமி, தலைமை கணக்கர் அம்பலவாணன் உள்ளிட்ட பணியாளர்கள் உடன் இருந்தனர். இன்று காலை ஆன்மிகப் பயணம் திருச்செந்துாரில் இருந்து புறப்பட்டு பழமுதிற்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழனி ஆகிய படை வீடுகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகின்ற ஜூன் 10ம் தேதி ஊருக்கு திரும்புகின்றனர்.