பதிவு செய்த நாள்
08
ஜூன்
2024
08:06
சென்னை; விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியம், பையூர் கிராமத்தில் இருந்து சேத்தார் செல்லும் வழியில், வாழைத்தோட்டத்தின் அருகில், பல்லவர் காலத்தைச் சேர்ந்த முருகன் சிற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சென்னை பல்கலையின் சைவ சித்தாந்த துறை மாணவர் அலெக்ஸ் கூறியதாவது: சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் படிப்பை முடித்து, தற்போது சென்னை பல்கலையில் சைவ சித்தாந்தம் பயின்று வருகிறேன். ஓய்வு நேரங்களில் தொல்லியல் சான்றுகளை தேடி கள ஆய்வு செய்து வருகிறேன். சமீபத்தில் பையூர் பகுதியில் கள ஆய்வு செய்தபோது, வாழைத்தோட்டத்தின் வரப்பு பகுதியில், மரத்தின் மீது சாத்திய நிலையில் பலகை கல்லில் சிற்பம் இருந்ததை அறிந்து, சுத்தம் செய்து ஆராய்ந்தேன். அது, பல்லவர் காலமான 8 – 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த முருகன் சிற்பம் என்பதை அறிந்தேன்.
இதுகுறித்து, அப்பகுதி மக்களிடம் கேட்ட போது, துர்க்கை சிலையாக வழிபடுவதாகக் கூறினர். இந்த சிற்பம் 60 செ.மீ., உயரம், 19 செ.மீ., அகலம் உள்ளது. இதில், தாமரை மலரின் மீது நின்ற கோலத்தில் முருகன் உள்ளார். தலையில் பெண் தெய்வங்களுக்கு அணிவிக்கும் கரண்ட மகுடம் உள்ளது. வலது மேல் கையில் சேவல் உள்ளது. இடது மேல் கையில் வஜ்ராயுதமும், அருகில் வேலும் உள்ளன. வலது கீழ் கை, ஆசீர்வதிக்கும் நிலையான அபய நிலையில் உள்ளது; இடது கீழ் கை, இடையின் மீது ஊன்றி உள்ளது. முருகனின் இடையில் அணியும் வீரச்சங்கிலியான சன்னவீரம் இந்த சிற்பத்தில் இல்லை. இடையில் அணிந்த உடையின் மேல், தொடை பகுதியில் இருபுறமும் தொங்கும் வகையில், துணியால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது பொதுவாக, விழுப்புரம் பகுதிகளில், பல்லவர் காலத்தைச் சேர்ந்த முருகன், துர்க்கை சிலைகள் கிடைக்கும் நிலையில், இந்த முருகன் சிற்பம், அவற்றில் இருந்து வேறுபட்டதாகவும், தனித்தன்மை உள்ளதாகவும் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.