பதிவு செய்த நாள்
08
ஜூன்
2024
08:06
காஞ்சிபுரம்; பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்யதேசங்களில், 57வதாக விளங்குவது காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 1ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சப்பரத்தில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள், நான்கு ராஜ வீதிகளில் உலா வந்தார். மாலை சிம்ம வாகன உற்சவம் நடந்தது. இரண்டாம் நாள் உற்சவமான கடந்த 2ம் தேதி காலை ஹம்ஸ வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் வைகுண்ட பெருமாள் உலா வந்தார்.
மூன்றாம் நாள் உற்சவமான கடந்த 3ம் தேதி காலை கருடசேவை உற்சவமும், இரவு ஹனுமந்த வாகன உற்சவமும், கடந்த 4ம் தேதி காலை காலை சேஷ வாகனமும், இரவு சந்திர பிரபை உற்சவமும் நடந்தது. ஐந்தாம் நாள் உற்சவமான கடந்த 5ம் தேதி காலை நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கிலும், இரவு யாளி வாகனத்திலும், ஆறாம் நாள் உற்சவமான, நேற்று முன்தினம் காலை வேணுகோபாலன் திருக்கோலத்தில் சப்பரத்திலும், இரவு யானை வாகத்திலும் பெருமாள் உலா வந்தார். இதில், ஏழாம் நாள் பிரபல உற்சவமான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.