மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவிலில் 56ம் ஆண்டு திருவிழா கடந்த, 4ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. நாளை (9ம் தேதி) நள்ளிரவு முனியப்பன் பூஜையும், கிராம சாந்தி பூஜையும் நடைபெற உள்ளது. 11ம் தேதி இரவு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், பால் குடங்கள், பூவோடு, பூங்கரகம் ஆகியவற்றை கோவிலுக்கு அழைத்து வருகின்றனர். பன்னிரெண்டாம் தேதி காலை மதுரை வீரன் அழைப்பும், மதியம் பொங்கல் வைத்து பூஜை செய்தலும், திருக்கல்யாண பூஜையும், மாலையில் மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. 13ம் தேதி மஞ்சள் நீராட்டும், மறுபூஜையும், அன்னதானமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.