பதிவு செய்த நாள்
09
ஜூன்
2024
10:06
திருப்பாச்சேத்தி; திருப்பாச்சேத்தி அருகே கானூர் பெரியநாச்சி அம்மன் கோயிலில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் களரி திருவிழாவிற்காக 80 கி.மீ., தூரம் நடந்து சென்று மண்பானையில் பூஜை பொருட்கள் வாங்கி தலைச்சுமையாக கொண்டு வந்த திருவிழா நடத்துவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கானூர் பெரியநாச்சி அம்மன் கோயிலில் கானூர், கல்லூரணி, புல்வாய்க்கரை, வேம்பத்தூர், திருப்பாச்சேத்தி, ஒக்கப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து ஏழு வருடங்களுக்கு ஒரு முறை களரி திருவிழா நடத்துவது வழக்கம், இந்த களரி திருவிழாவிற்காக கானூரில் இருந்து விரதமிருந்த பக்தர்கள் நடைபயணமாக (போக வர 80 கி.மீ.,) மதுரையில் இருந்து பூஜை பொருட்களை மண்பானையில் வாங்கி அதனை தலைச்சுமையாக ஊருக்கு கொண்டு வந்து பூஜை செய்து வருகின்றனர். பாரம்பரியம் பாரம்பரியமாக இந்த திருவிழா நடந்து வருகின்றன. இந்தாண்டு திருவிழா கடந்த ஏழாம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 9ம் தேதி மதுரையில் இருந்து பூஜை பொருட்களை தலைச்சுமையாக கொண்டு வந்த பின் நேற்று மாலை வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக பெரியநாச்சி அம்மன் கோயிலுக்கு வந்தனர். பின் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 12ம் தேதியுடன் விழா நிறைவு பெறுகிறது. இன்று(திங்கள் கிழமை) மாலை ஏழு மணிக்கு பொங்கல் விழாவும், 12ம் தேதி அனபூஜையும் நடைபெற உள்ளது. கோயில் பூசாரி ராஜேந்திரன் கூறுகையில் :
25 வருடங்களுக்கு ஒரு முறை நடந்த திருவிழா, தற்போது ஏழு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. போக்குவரத்து வசதி பெருகி விட்டாலும் நடந்தே சென்றுதான் பூஜை பொருட்களை வாங்கி வந்து விழா நடத்துகிறோம், வைகாசி மாதம் முதல் தேதி காப்பு கட்டி விரதமிருந்து வைகாசி 30ம் தேதியுடன் விழா முடிவடைகிறது. இவ்வாறு பூஜை செய்தால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை, என்றார்.