பதிவு செய்த நாள்
10
ஜூன்
2024
10:06
திருத்தணி; திருத்தணி நகரத்தில், 100க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. மேலும் முருகன் மலைக்கோவிலில் கோவில் நிர்வாகம் சார்பில், ஆர்.சி.சி., மண்டபம், மயில் மண்டபம், காவடி மண்டபம் மற்றும் விநாயகர் சன்னிதி மண்டபம் ஆகிய பகுதிகளில் திருமணம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், நேற்று திருமண முகூர்த்த நாள் என்பதால், திருத்தணி நகரத்தில் மட்டும், 35 தனியார் திருமண மண்டபங்களிலும், மலைக்கோவிலில் 40 திருமணங்கள் என, 75 திருமணங்கள் நடந்தன. இதுதவிர, முருகன் மலைக்கோவில் வளாகத்தில் மயில் மண்டபத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் இளைய மகன் நடிகர் பிரேம்ஜிக்கும், சேலம் பகுதியைச் சேர்ந்த இந்து என்பவருக்கும் திருமணம் நடந்தது. இசை அமைப்பாளர் கங்கை அமரன், மூத்த மகன் வெங்கட்பிரபு, இளையராஜா மகன் கார்த்திக்ராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். நேற்று திருமண முகூர்த்தம், வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்திற்கு மாறாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், மூலவரை தரிசிக்க, இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.