கோவை; கோவை சங்கனுாரில் அமைந்துள்ள செல்வவிநாயகர், ஆதி கோனியம்மன், மாகாளியம்மான் கோவில்களின் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.சிரவை ஆதினம் நான்காவது குருமஹா சந்நிதானம் ராமானந்த குருபரகுருபர சுவாமிகள் பங்கேற்று கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார். அவர் பேசுகையில், சங்கனுாரில் குடி கொண்டுள்ள ஆதி கோனியம்மன், இந்த பகுதி மக்களின் காவல் தெய்வமாக இருந்து அருள்பாலித்து வருகிறார். பல நுாறு ஆண்டுகள் பழமையான இந்த கோவிலை இங்கு வாழ்ந்து வரும் மக்கள் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருகிகின்றனர். அதேபோல், இங்குள்ள மாகாளியம்மனையும், செல்வவிநாயகரையும் மக்கள் வணங்கி வருகின்றனர். இந்த கோவிலின் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. பக்தர்கள் அம்மனின் அருளாசியை பெற்று நல்ல வளத்தோடும், உடல் நலத்தோடும் வாழ வேண்டுகிறேன். இவ்வாறு, அவர் பேசினார். பல ஆயிரம் பக்தர்கள், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று அம்மனின் அருள் பெற்றனர்.