3 நாளாக குறைக்கப்பட்ட ராமேஸ்வரம் ஆனி பிரம்மேற்சவ விழா!; அறிக்கை தாக்கல் ஐகோர்ட் உத்தரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2024 04:06
மதுரை: ராமேஸ்வரம் கோயில் ஆனி பிரம்மேற்சவ விழா எப்போது 3 நாட்களாக குறைக்கப்பட்டது. அறிக்கை தாக்கல் செய்ய கோவில் நிர்வாகத்திற்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கதலம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில். இங்கு ஆனி மாதம் நடக்கும் பிரம்மேற்சவ விழா சிறப்பு மிக்கது. இங்கு 10 நாட்கள் நடத்தப்பட வேண்டிய ஆனி பிரம்மேற்சவ விழா, 3 நாட்கள் மட்டுமே நடத்தப்படுவதாக திருச்சி, அர்ச்சகர் கோபாலகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் ஆனி உற்சவம் விதிப்படி 10 நாட்கள் நடத்த வேண்டும். சில வருடங்களாக 3 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. ஆனி உற்சவ நிகழ்வை 10 நாட்கள் நடத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர்.
இதை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு கூறியதாவது; எந்த ஆண்டு முதல் ஆனி உற்சவ நிகழ்வு 10 நாட்கள் நடத்தப்பட்டது? எந்த ஆண்டிலிருந்து இருந்து அது மூன்று நாட்களாக குறைக்கப்பட்டது என்பது குறித்து கோயில் தரப்பில்அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.