ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா : ஜூன் 15ல் நடைசாத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2024 05:06
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடக்க உள்ளதால், ஜூன் 15ல் கோயில் நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.
ராமாயண வரலாற்றில் இலங்கையில் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு வந்த ராமபிரானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட ராமேஸ்வரம் கடற்கரை மணலில் சீதை சிவலிங்கம் வடிவமைத்தது, அனைவரும் தரிசனம் செய்தனர். இதுவே ராமநாதசுவாமி கோயில் உருவான வரலாறு ஆகும். இந்நிலையில் இக்கோயிலின் தல வரலாறு குறித்து பக்தர்களுக்கு நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா கொண்டாடுவர். அதன்படி இந்தாண்டு ஜூன் 14 ல் ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்குகிறது. அன்று மாலை ராவணன் வதம் செய்தல், ஜூன் 15ல் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் ராவணன் தம்பி விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டுதல், ஜூன் 16ல் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடக்க உள்ளது. இதில் ஜூன் 15ல் ராமர், சீதை லட்சுமணர், அனுமான் கோயில் இருந்து புறப்பாடாகி கோதண்ட ராமர் கோயிலுக்கு சென்று திரும்புவதால், அன்று அதிகாலை 3 மணி முதல் 3 :30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். இதனைதொடர்ந்து கால, சாயரட்ச பூஜைகள் முடிந்தவுடன் காலை 7 மணிக்கு முதல் மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படும். பின் மாலை 5 மணிக்கு ராமர் திரும்பியதும் கோயில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.