பலேபேட் வெங்கடேஸ்வரா கோவிலில் பரவசப்படுத்தும் வெள்ளி சுக்ரீவர் சிலை..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2024 12:06
ராமாயண காலத்தில் சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச் சென்றார். அவரை அங்கிருந்து மீட்டு வர, ராமருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது சுக்ரீவரும், ஹனுமனும் தான். ராமர் கோவில் உள்ள இடங்களில் கண்டிப்பாக ஹனுமனுக்கும் சிலை இருக்கும். சில இடங்களில் ஹனுமனுக்கு மட்டும் தனியாக கோவில் உள்ளது. ராமருக்கு உதவிய சுக்ரீவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில், பெங்களூரில் அமைந்துள்ளது. பெங்களூரு சிக்பேட் பலேபேட் மெயின் ரோட்டில் சுக்ரீவர் வெங்கடேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சுக்ரீவருக்கு அர்ப்பணித்து உள்ளனர். கோவில் கருவறையில் 6 அடி உயரத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட, சுக்ரீவர் சிலை உள்ளது. துாரத்தில் இருந்து சிலையை பார்க்கும்போது, ஹனுமன் சிலை போன்று இருக்கும். அருகில் சென்று பார்க்கும்போது தான் சுக்ரீவர் சிலை என்று தெரியும். சிலையும், இரண்டு பற்களும் பார்ப்பதற்கு பிரம்மிப்பாக இருக்கும். இந்த கோவில் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 6:00 மணி முதல் இரவு 8: 30 மணி வரையும் திறந்திருக்கும். கோவிலில் தினமும் வழக்கமான பூஜைகள் நடக்கின்றன. ராமநவமி, ஹனுமான் ஜெயந்தி அன்று சிறப்பு பூஜை நடக்கிறது.