பதிவு செய்த நாள்
12
ஜூன்
2024
10:06
கூடுவாஞ்சேரி; கூடுவாஞ்சேரி ரயில்வே மேம்பாலம் அடுத்துள்ள டி.டி.சி., நகர் பகுதியில், மகராஜ் ஸ்ரீசீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவில், 20ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, நேற்று புஷ்பாஞ்சலி சேவை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை 6:00 மணிக்கு ஆரத்தியும், காலை 8:45 மணிக்குவிக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், மேதா தட்சிணாமூர்த்தி ஹோமம், திருமூர்த்தி ஸ்வரூபசாய்நாதர் அனுக்கிரக லோக ஜெயமங்கள ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, மஹா அபிஷேகம், புஷ்பாஞ்சலி சேவை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு ஆரத்தியுடன் மஹா தீபாராதனை நடந்தது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், ஆரத்திக்கு பின், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சத்குரு சாயிநாதர் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 7:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும், 8:00 மணிக்கு பக்தர்களுக்கு அருள்பிரசாதமும் வழங்கப்பட்டது. இதில், நந்திவரம்- – கூடுவாஞ்சேரி நகராட்சி, ஊரப்பாக்கம், ஆதனுார், மாடம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.