பதிவு செய்த நாள்
12
ஜூன்
2024
11:06
திருப்போரூர்; திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலின் மேற்கு பகுதியில், 100 அடி உயரத்தில் உள்ள பிரணவ மலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது.
அகத்தியர், முருக பெருமானிடம் பிரணவத்தின் பொருள் கேட்க, பிரணவமே மலையாக காட்சியளித்தது என்றும், திருமாலும், மஹாலட்சுமியும் இக்கோவிலில் வழிபட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. சுமார், 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், தினமும் காலை, மாலையில் பூஜை நடத்தப்படுகிறது. பிரதோஷம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், படி உற்சவம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்துசெல்கின்றனர். இங்குள்ளமலைகோவிலுக்கு செல்ல, வழித்தடம் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், முறையான தார்ச்சாலையோ, சிமென்ட் சாலையோ அமைக்கப்படவில்லை. மலைச்சரிவில், சாலை கரடு முரடாக பாதைமட்டுமே உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், குறிப்பாக முதியவர்கள் மலை ஏறுவதற்கு சிரமப்படுகின்றனர். எனவே, பக்தர்களின் நலன் கருதி, மலைக்கு செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என,பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.