சுசீந்திரம் கோவில் தெப்பக்குளத்தை தொழில் நுட்ப உதவியுடன் சீரமைக்க ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2024 03:06
சுசீந்திரம்; சுசீந்திரம் கோவில் தெப்பக்குளத்தை தற்போதைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முழுவதுமாக சீரமைக்க தமிழக அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. சுசீந்திரம் கோவில் தெ ப்பக்குளத்தை ஆய்வு செய்ய நேற்று காலை சுசீந்திரம் பகுதிக்கு வந்த அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, அறங்காவலர் குழு தலைவர் பிரபாஜி ராமகிருஷ்ணன் ஆகியோருடன் கிழக்கு மாவட்ட திமுகதுணைச் செயலாளர் பூதலிங்கம்பிள்ளை , கோவில் அலுவலக பொறியாளர் ராஜ்குமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் உட்பட பலர் ஆய்வில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் கூறும்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல குளங்களில் மாசு ஏற்பட்டு உள்ளது. இவற்றை கண்டறிந்து தற்போதைய தொழில்நுட்ப உதவியுடன் சீரமைக்க அணு விஞ்ஞானியின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது. சுசீந்திரம் குளத்தின் தண்ணீர் வரும் மடை , வெளியேறும் மடை , பழுதுகள் மற்றும் மாசு ஏற்படும் காரணங்கள் கண்டறிந்து சீரமைக்கப்படும். இக்குளத்தை மாடலாக கொண்டு குமரி மாவட்டத்தில் உள்ள மற்ற குளங்களும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே சுசீந்திரம் கோவில் குளத்தின் தண்ணீர் வரும் மடை சீரமைக்க 30 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்விற்குப்பின் சுசீந்திரம் பகுதியில் கமிட்டி ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களின் ஆலோசனையின் பேரிலும் விரைவில் குளம் முழுமையாக சீரமைக்கப்படும் என அவர் கூறினார். அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் சாக்கடை மற்றும் குப்பைகள், திடக்கழிவுமேலாண்மை உட்பட பல ஆய்வுகளை மாவட்டத்தில் நடத்தி வருகிறோம். தற்போது தினமும் சுசீந்திரம் கோவிலுக்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் புனித நீராக கருதும் இக்குளத்தில் ஏற்பட்டுள்ள மாசுகளை அகற்றி சிறந்த தொழில்நுட்ப உதவியுடன் கண்ணாடி போன்ற தண்ணீராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக குளத்தின் தண்ணீர் ஆய்வுக்காக மாதிரி சேகரிக்கப்படுகிறது. மேலும், குமரி மாவட்டத்தின் அப்டா மார்க்கெட் உட்பட பல இடங்களில் சேரும் குப்பைகளை நவீன தொழில்நுட்பம் உதவியுடன் அகற்றவும், தூய்மையான மாவட்டமாக மாற்றவும் தற்போது ஆய்வுகளை நடத்தி வருகிறோம். ஆய்வு முடிந்த ஆறு மாதத்திற்குள் பணிகள் தொடங்கப்படும் எனஅவர் கூறினார்.