பதிவு செய்த நாள்
12
ஜூன்
2024
04:06
பல்லடம்; பல்லடம் அருகே, கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பல்லடம் அடுத்த, சாமளாபுரம் பேரூராட்சி காளிபாளையம் கிராமத்தில், பழமையான ஸ்ரீகரிய காளியம்மன் கோவில் உள்ளது. பல ஆண்டுக்குப் பின், இக்கோவில் திருப்பணி துவங்கி, இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. முன்னதாக, ஜூன் 9 அன்று கிராம சாந்தியுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மறுநாள், மகா கணபதி ஹோமம், நவக்கிரகம், மகாலட்சுமி ஓமங்கள் நடந்தன. சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவிலில் இருந்து முளைப்பாளிகை, மற்றும் தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து, கங்கணம் கட்டுதல், காலா கர்ஷனம், முதல் கால யாக பூஜை உள்ளிட்டவை நடந்தன. நேற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜையை தொடர்ந்து, சிவகிரி ஆதீனம் அருளாசி வழங்கினார். இதையடுத்து, இரவு 9.00 மணிக்கு மருந்து சாற்றுதல் நிகழ்வு நடந்தது. நேற்று காலை, நான்காம் காலை ஆக பூஜையை தொடர்ந்து, யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் புறப்பட்டன. காலை, 9.30 மணிக்கு கரிய காளியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, விநாயகர், வீரமாத்தி அம்மன், கன்னிமார், கருப்பராயன், பட்டத்தரசி அம்மன் மற்றும் மாட்டைய கவுண்டர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. சிவகிரி ஆதீன, 75வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீபாலமுருக ஈசான சிவசமய பண்டித குரு சுவாமிகள் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தபின் கரிய காளியம்மனை தரிசித்தனர். விழா குழு சார்பில், பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.