திருப்புல்லாணி, திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சி குத்துக்கல்வலசையில் பழமை வாய்ந்த காந்தாரியம்மன் கோயில் உள்ளது. கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவ விழாவை முன்னிட்டு மூலவர் காந்தாரி அம்மன், குத்துக்கல் முனீஸ்வரர், தர்ம முனீஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு நேற்று அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு அக்னி சட்டி, பால்குடம், அலகு குத்தி நேர்த்திக்கடன் பக்தர்கள் எடுத்து வந்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். மூலவர்களுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் கோயில் முன்பாக பொங்கலிட்டனர். மாவிளக்கு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குத்துக்கல்வலசை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.