பதிவு செய்த நாள்
17
ஜூன்
2024
10:06
சென்னை: தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பஸ்கள் வாயிலாக, தினமும், 400 பேரை அழைத்து சென்று, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கி உள்ளது.
தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பஸ்கள் வாயிலாக, திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையானை தரிசிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அதனால், தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கான, தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை, 150ஆக குறைக்கப்பட்டது. தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால், கூட்டம் ஓரளவு குறைந்து உள்ளது. எனவே, தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு வழங்கும் தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை, 400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தினமும் சுற்றுலா பஸ்கள் வாயிலாக, 400 பேர் தரிசிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளதாக, தமிழக சுற்றுலா துறை தெரிவித்து உள்ளது.