பதிவு செய்த நாள்
17
ஜூன்
2024
10:06
திருச்சி; திருச்சி மாவட்டம், துறையூர் அருகே ஆலத்துடையான்பட்டியில், சவுந்தரவள்ளி தாயார் உடனுறை சோமநாதர் சிவன் கோவில் உள்ளது. கோவிலில் புனரமைப்புக்காக பாலாலயம் நடக்கவுள்ளது. இந்நிலையில், கோவிலின் பழமையையும், வரலாற்றையும் பதிவு செய்யும் வகையில், கல்வெட்டு ஆய்வாளர் ரவிக்குமார், தொல்லியல் ஆய்வாளர் தீபக் ஆகியோர் கோவிலை பார்வையிட்டு, அங்கிருந்த கல்வெட்டுகளை படியெடுத்து, ஆய்வு செய்தனர். ஆய்வில், கோவில் ராஜராஜசோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.
ஆய்வாளர்கள் ரவிக்குமார், தீபக் ஆகியோர் கூறியதாவது: கோவில் கல்வெட்டுகளால், ராஜராஜசோழன் வாரிசுகள் ராஜேந்திரன், மூன்றாம் ராஜராஜன் ஆகியோர் கோவிலுக்கு நிலங்கள் தானமாக வழங்கியது தெரிகிறது. இந்த ஊருக்கு, முன்பு பெரிய நாவலுார் என்ற பெயர் இருந்துள்ளது. கோவிலில் உள்ள இறைவனுக்கு, அழகிய சேமீசரமுடைய நாயனார் என்ற பெயர் இருந்ததை, கல்வெட்டுகளால் அறிய முடிகிறது. கோவிலின் நந்தி மண்டபம் முன், இரு கைகளையும் கூப்பிய நிலையில், நின்ற கோலத்தில் இருக்கும் சிலை, ஊர் மக்களால் முனிவரின் சிலை என்று கருதப்பட்டு வந்துள்ளது. தற்போது நடந்த ஆய்வால், அந்த சிலை அரசன் சிலை என்பதும், இதுபோன்ற சிலை, திருவலஞ்சுழி கோவிலில் இருப்பதும் தெரிய வந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.