பதிவு செய்த நாள்
22
ஜூன்
2024
11:06
மீஞ்சூர்; மீஞ்சூர் அடுத்த மேலுார் கிராமத்தில், திருவுடையம்மன் கோவில் அமைந்து உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் வரும் பவுர்ணமி நாளில் இங்கு, பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.
அன்றைய நாளில் மேலுார் திருவுடையம்மன், திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன், திருமுல்லைவாயலில் உள்ள கொடியுடையம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர். பவுர்ணமி நாளான நேற்று மேலுார் திருவுடையம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதியும் அங்கு செய்யப்படவில்லை. சுட்டெறிக்கும் வெயிலில், 1 கி.மீ., தொலைவிற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து அவதியுற்றனர் வயதானவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சோர்வடைந்தனர். குடிநீர் வசதியில்லாமல் தாகத்தில் தவித்தனர். பராமரிப்பு இல்லாத கழிப்பறைகளால் சிரமத்திற்கு ஆளாகினர். அங்குள்ள பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் பூட்டி கிடந்ததால், வெளி வளாகத்தில் நிழலுக்கு ஒதுங்கினர். வெள்ளிக்கிழமைகளில் வரும் பவுர்ணமி நாளில், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பது தெரிந்தும், கோவில் நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என, அதிருப்தியுடன் தெரிவித்தனர். ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இனிவரும் காலங்களில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.