பதிவு செய்த நாள்
22
ஜூன்
2024
11:06
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே சில்வார்பட்டி தொட்டிச்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோபால்பட்டி சில்வார்பட்டி தொட்டிச்சியம்மன், மகா லிங்கேஸ்வரர், மகா கருப்பணசாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர் வழிபாடு மகாலட்சுமி ஹோமம், சுதர்சன் ஹோமம், நவகிரக ஹோமம், வழிபாடு, முதற்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இரண்டாம் கால யாக பூஜை, வேதபாராயணம், மூல மந்திர ஹோமம், நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகளும் மகாபூர்ணாகுதி கடம்வலம் வந்த பிறகு கலசங்களுக்கு பூஜைகள் நடைபெற்ற பிறகு தீபாராதனையை தொடர்ந்து மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த காசி, ராமேஸ்வரம், அழகர்மலை, வைகை, காவேரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் யாகசாலையில் இருந்து கோவிலைச்சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் கும்பத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார்.இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சில்வார்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.