மேலநெட்டூர் சொர்ண வாரீஸ்வரர் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2024 11:06
மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூர் ,சாந்தநாயகி அம்மன் சமேத சொர்ணவாரீஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மேலநெட்டூர் சொர்ணவாரீஸ்வரர் சாந்தநாயகி அம்மன் கோயிலில் வருடந்தோறும் ஆனித்திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் போது சுவாமிகள் சிம்மம்,கமலம்,அன்னம்,யானை,குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சர்வ அலங்காரங்களுடன் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றதை தொடர்ந்து சுவாமிகள் சர்வ அலங்காரங்களுடன் திருக்கல்யாண மேடைக்கு எழுந்தருளிய பின்னர் அர்ச்சகர்கள் ஹோமங்கள் வளர்த்து பூஜைகளை செய்த பின்பு திருக்கல்யாணம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து நேற்று சொர்ணவாரீர்ஸ்வரர் சுவாமிகள் தேரோட்டத்திற்காக பெரிய தேரில் எழுந்தருளினார்.பின்னால் சிறிய தேரில் சாந்தநாயகி அம்மனும் முன்னாள் விநாயகர் மற்றும் முருகன் சுவாமியும் எழுந்தருளிய பிறகு மாலை 4:30 மணிக்கு தேர்கள் நிலையிலிருந்து கிளம்பி நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.பின்னர் தேர் மாலை 5:45 மணிக்கு நிலையை அடைந்தது.அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. தேரோட்ட விழாவில் மேலநெட்டூர் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் செல்லப்பா, தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் மேலநெட்டூர், வேலடிமடை கிராம மக்கள் செய்திருந்தனர்.