பதிவு செய்த நாள்
24
ஜூன்
2024
12:06
மானாமதுரை; தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும்,கிராம ஒற்றுமைக்காகவும் புரவி எடுப்பு திருவிழாக்கள் நடைபெற உள்ளதால் மானாமதுரையில் புரவிகள் செய்வதற்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.
தமிழகத்தின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல்,மதுரை,ராமநாதபுரம், சிவகங்கை,விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களை வேண்டி நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும்,கிராம மக்களின் ஒற்றுமைக்காகவும் புரவி எடுப்பு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது தென் மாவட்டங்களில் புரவி எடுப்பு திருவிழாக்கள் ஆரம்பமானதை தொடர்ந்து மானாமதுரையில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களிடம் ஏராளமான கிராம மக்கள் புரவிகள் செய்வதற்கு ஆர்டர்கள் கொடுத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் புரவிகள்,மாடு,சுவாமி சிலைகள்,மனித உருவங்கள் ஆகியவற்றை மும்முரமாக தயார் செய்து வருகின்றனர்.இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது, தென் மாவட்டங்களில் வழக்கம் போல் ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் ஏராளமான புரவி எடுப்பு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.அதன்படி இந்த ஆண்டுக்கான புரவி எடுப்பு திருவிழாக்கள் ஆரம்பமானதை தொடர்ந்து ஏராளமான கிராமங்களை சேர்ந்தவர்கள் புரவிகள் செய்வதற்கு ஆர்டர்கள் கொடுத்துள்ளனர் இதையடுத்து நாங்களும் பயபக்தியோடு விரதம் இருந்து புரவிகளை தயார் செய்து வருகிறோம். ஒரு புரவி செய்வதற்கு ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரம் வரை செலவாகி வருகிறது. நாங்கள் தயார் செய்து வைத்துள்ள புரவிகளை கிராம மக்கள் ஒற்றுமையாக ஒன்று கூடி உறவினர்களோடு வந்து புரவிகளுக்கு பூஜைகளை செய்து மானாமதுரைக்கு அருகில் உள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள் தலைச்சுமையாகவே தங்களது ஊர்களுக்கு கொண்டு சென்று காவல் தெய்வங்களுக்கு படைத்து வருகின்றனர்.தொலைவில் உள்ள ஊர்களை சேர்ந்தவர்கள் சரக்கு வாகனங்களில் கொண்டு சென்று வருகின்றனர். தற்போது மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் கிராமத்தில் நாளை நடைபெற உள்ள புரவி எடுப்பு திருவிழாவிற்காக புரவிகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.