பதிவு செய்த நாள்
29
ஜூன்
2024
08:06
கடலுார்; பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் நேற்று நடந்த தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
கடலுார், பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி பிரம்மோற்சவ விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 25ம் தேதி மாலை பக்கா சூரனுக்கு சோறு போடுதல் உற்சவம் நடந்தது. மறுநாள் அர்ச்சுனர் வில் வளைத்தலை தொடர்ந்து திரவுபதி அம்மன் – அர்ஜூனர் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் கரக உற்சவத்தையொட்டி திரவுபதியம்மன்– அர்ஜூனர் மற்றும் சக்தி கரகம் வீதியுலா நடந்தது. நேற்று தீமிதி திருவிழாவையொட்டி, காலை மாடு விரட்டல், அரவான் சிரசு ஊர்வலம், அரவான் களபலி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு வேண்டுதல் கொண்ட பக்தர்கள், சக்தி கரகத்துடன் வீதியுலா வந்து அக்னி குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது. இன்று காலை 108 பால்குட ஊர்வலம், அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, மாலை தர்மர் பட்டாபிஷேகம், மஞ்சள் நீராட்டு மற்றும் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர்கள் பெருமாள், சந்திரசேகரன், கோவிந்தன், கந்தசாமி, சுந்தரேசன், நாட்டாண்மை தங்கராசு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.