பதிவு செய்த நாள்
29
ஜூன்
2024
08:06
திருவண்ணாமலை; ஜவ்வாதுமலையில் விஜய நகர மற்றும் பல்லவர் காலத்தை சேர்ந்த நான்கு கல்வெட்டு கிடைத்தது. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பாலமுருகன் தலைமையிலான குழுவினர், ஜவ்வாதுமலையில் ஆய்வு நடத்தினர். இதில் தாலுாரில் இரண்டு விஜயநகர கால கல்வெட்டு, எருக்கம்பட்டு கிராமத்தில் ஒரு பல்லவர் கால நடுகல் கல்வெட்டு, பாடானுாரில், 10ம் நுாற்றாண்டு நடுகல் கல்வெட்டு என, நான்கு கல்வெட்டுகளை கண்டறிந்தனர்.
இதுகுறித்து கல்வெட்டு அறிஞர் ராஜகோபால் கூறியதாவது: தாலுாரில் கண்டெடுக்கப்பட்ட விஜயநகர கால கல்வெட்டு, கிருஷ்ணதேவ மகாராயர் காலத்தை சேர்ந்தவை. எருக்கம்பட்டு கிராமத்தில் கிடைத்த நடுகல்லில், வீரன் வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் ஏந்தியவாறு சண்டைக்கு தயார் நிலையில் உள்ளதை காட்டுகிறது. இவை பிற்கால பல்லவர் காலத்தை சேர்ந்தவை. பாடானுாரில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில், வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் கொண்ட வீரன் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. மலை நாட்டை சேர்ந்த மங்கலமுடைய துாலுார் என்ற ஊரை ஆண்டு வந்த எற்கருமான், போரில் சண்டையிட்டு இறந்து போயுள்ளார். இவரின் நினைவாக நடுகல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.