பதிவு செய்த நாள்
29
ஜூன்
2024
12:06
ஆண்டிபட்டி; தேனி மாவட்டம் வருஷநாடு அருகே மயிலாடும்பாறையில், கி.பி., 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் மூ.செல்வம், மன்னவனுார் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பழனி முருகன் ஆகியோர் மயிலாடும்பாறை பால்வண்ண நாதர் கோவிலில் இருந்த, 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டை கண்டறிந்தனர்.
இக்கல்வெட்டு குறித்து ஆசிரியர் மூ.செல்வம் கூறியதாவது: தேனி மாவட்டம் பண்டைய காலத்தில், அழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் நிர்வாகக் காரணங்களுக்காக, அழநாட்டை பல வள நாடுகளாக பிரித்தனர். அதன்படி மலைகள் சூழ்ந்த குறிஞ்சி நிலமான இன்றைய வருஷநாடு பகுதியை, வரிசை நாடு என்றனர். வருஷநாடு தற்போது ஒரு ஊரின் பெயராக உள்ளது. வரிசை நாட்டு ஓரோமில் என கல்வெட்டில் வருவதால், வருஷநாட்டில் மிக முக்கியமான ஊர்களில் ஒன்றாக மயிலாடும்பாறை இருந்துள்ளது. ஊரைச் சுற்றி மக்கள் வாழ்ந்ததற்கு சான்றாக நுண்கற்கால, புதிய கற்கால, கற்கருவிகள், பாறை ஓவியங்கள், பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள், இரும்பு உருக்கு ஆலைகள், கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு உள்ளன. பால்வண்ண நாதர் கோவிலில் கண்டறியப்பட்ட மூன்று வரிகள் உடைய துண்டு கல்வெட்டில், மயிலாடும்பாறை ஊரின் பழைய பெயர், ‘ஓரோமில்’ என்றும், அங்குள்ள இறைவனின் பெயர் ஓரோமிஸ்வரம் உடைய நாயனார் என்பதையும் அறிய முடிகிறது. தொண்டைமானாரின் மனைவி புன்னன் தேவாண்டாளேன், இங்கு கோவில் கொண்டுள்ள இறைவனுக்கு தினமும் திருவமுது படைப்பதற்கு தானம் செய்த நிலம் குறித்த செய்தியை கல்வெட்டு கூறுகிறது. தொண்டைமானார் என்பவர்கள் பாண்டிய மன்னர்களின் வள நாடுகளை நிர்வாகம் செய்யும் அதிகாரிகளாக இருந்தவர்கள். கல்வெட்டில் வரும் அணுக்கிகள் என்பது பணிப்பெண்களை குறிக்கும். தினமும் பூஜைகள் செய்ய இவர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.