பதிவு செய்த நாள்
05
ஜூலை
2024
03:07
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே உள்ள ராமானுஜர் சன்னதியில் திருவாதிரை வைபவம் நடந்தது.
காரமடை அடுத்த பெள்ளாதி ஊராட்சி, சின்னத்தொட்டிபாளையத்தில் கல்யாண ரெங்கநாயகி சமேத, கல்யாண ரெங்கநாதர் மற்றும் ராமானுஜர் கோவில் உள்ளது. இங்கு ராமானுஜருக்கு என தனியாக சன்னதி உள்ளது. இன்று திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு ராமானுஜர் சன்னதியில் வைபவம் நடந்தது. இன்று காலை கோவிலில் திருப்பள்ளி எழுச்சி, திருப்பல்லாண்டு, கால சந்தி பூஜை ஆகியவை நடந்தன. அதைத் தொடர்ந்து மூலவருக்கும், உற்சவமூர்த்திக்கும் ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. இதில் பால், தயிர், இளநீர், தேன், மஞ்சள், சந்தனம் ஆகிய வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ராமானுஜர் வெண்பட்டு குடையுடன், கோவிலில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து ஆஸ்தானம் வந்தடைந்தார். உச்சக்கால பூஜை, சாற்றுமுறை சேவித்த பின், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் கோவிலில் உள்ள கல்யாண ரங்கநாயகி, கல்யாண ரங்கநாதர் ஆகிய சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.