பதிவு செய்த நாள்
05
ஜூலை
2024
03:07
புதுடில்லி; லாரன்ஸ் ரோடில் அமைந்துள்ள ஸ்ரீஐஸ்வர்ய மகா கணபதி கோவிலில், 37வது ஆண்டு மஹோத்ஸவம் நேற்று முன்தினம் காலை ஸ்ரீகணபதி மற்றும் துவஜஸ்தம்ப பூஜையுடன் துவங்கியது.
உலக நன்மை வேண்டியும், அமைதியான, வளமான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலம் அனைவருக்கும் அமையவும், முக்கிய ஹோமங்கள் செய்யப்பட்டன. இரண்டாம் நாளான நேற்று காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம் நடைபெற்றது. மஹன்யாஸ பாராயணம், ஏகாதச ருத்ர ஜபம், ஸிவாஷ்டோத்தர ஸத நாமாவளி, ஸ்ரீ ருத்ர நாம த்ரிஸதீ நாமார்ச்சனை, மிருத்யுஞ்சய மற்றும் ருத்ர ஹோமங்கள் நடைபெற்றன. பூர்ணாஹூதியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. கோவிலில் அமைந்துள்ள சிவபரிவார், அனுமன், நவகிரஹ சன்னிதிகள் கலச அபிஷேகம் செய்து சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக இதில் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை ஸ்ரீஐஸ்வர்ய மகா கணபதி உற்சவ மூர்த்தியை மேளதாளங்கள் முழங்க, கோவில் காலனியை சுற்றி பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.