பதிவு செய்த நாள்
05
ஜூலை
2024
05:07
தஞ்சாவூர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான 88 திருக்கோவில்களுள் ஒன்றாகவும், உலக புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாக திகழ்வது தஞ்சாவூர் பெரிய கோவில். இக்கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளி வராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதையடுத்து 22வது ஆண்டாக வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா இன்று(05ம் தேதி) துவங்கி 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்படி இன்று(05ம் தேதி) மாலை 6:00 மணிக்கு வராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து நாளை (6-ம் தேதி) மஞ்சள் அலங்காரம், 7-ம் தேதி குங்குமம் அலங்காரம், 8-ம் தேதி சந்தன அலங்காரம், 9-ம் தேதி தேங்காய்ப்பூ அலங்காரம், 10-ம் தேதி மாதுளை அலங்காரம், 11-ம் தேதி நவதானிய அலங்காரம், 12-ம் தேதி வெண்ணெய் அலங்காரம், 13-ம் தேதி கனிவகை அலங்காரம், 14-ம் தேதி காய்கறி அலங்காரம், 15-ம் தேதி புஷ்ப அலங்காரம் நடைபெறவுள்ளது. ஆஷாட நவராத்திரி விழாவின் போது மாலை நேரத்தில் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இறுதிநாளான 15-ம்தேதி வராஹி அம்மன் வீதியுலா நடைபெறவுள்ளது. அப்போது நாதஸ்வரம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட வாணவேடிக்கையுடன் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கவிதா தலைமையில் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.