19 ஆண்டுகளுக்கு பிறகு அய்யனார் கோவில் திருவிழா புரவி எடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2024 10:07
தேவகோட்டை; தேவகோட்டை அருகே சேவுகபெருமாள் அய்யனார் கோவில் ஆற்றங்கரை நாச்சியம்மன் கோவில் உள்ளது. இப்பகுதியில் உள்ள 12 கிராமத்தினரின் முக்கியமான பொது கோவில். இக்கோவில் திருவிழா குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மது எடுப்பு, புரவி எடுப்பு , எருது கட்டு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்நிலையில கோவில்கள் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் இரு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் திருவிழா நடத்த முடிவு செய்தனர். 19 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் திருவிழா துவங்கியது. முதல்கட்டமாக அம்மனை நீரில் வைத்தல் வழிப்பட்டனர். 2 ந்தேதி அம்மனை நீரில் இருந்து எடுத்து பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். சுற்றியுள்ள 12 கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தென்னம்பாலை வளர்த்த மது எனும் பானை சுமந்து நான்கு புறமும் ஒவ்வொரு ஊராக சேர்ந்து கோட்டவயல் சேவுக பெருமாள் கோவிலை அடைந்தனர். அங்கிருந்து அனைவரும் மணிமுத்தாறில். உள்ள ஆற்றங்கரை நாச்சியம்மன் கோவிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். 3 ந்தேதி 19 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் குதிரை, காளைகள், உட்பட தங்கள் நேர்த்திக்கடனுக்கு ஏற்ப பொம்மைகளை செய்து ஊர்வலமாக எடுத்து வந்து நாடகத் திடலில் வைத்தனர். குதிரை நாடகம் பார்ப்பதாக ஐதீகம். இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று பொம்மைகள் ஊர்வலமாக சேவுக பெருமாள் அய்யனார் கோவிலுக்கு எடுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை எருது கட்டு மாடு பிடி நிகழ்ச்சி நடந்தன. திடீரென கனமழை கொட்டியதால் ஐந்து காளைகள் மட்டும் போட்டியில் களமிறங்கின. மக்கள் நனைந்து கொண்டே பார்வையிட்டனர்.