பதிவு செய்த நாள்
06
ஜூலை
2024
11:07
சிக்மகளூர்; கர்நாடகாவின் சிருங்கேரியில் 15 செ.மீ., அளவுக்கு கனமழை பெய்ததால், துங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சிருங்கேரி சாரதாம்பா பீடத்துக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் இறங்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவழை பெய்து வருகிறது.
சிருங்கேரி தாலுகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. சிருங்கேரி நகரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 15 செ.மீ., மழை பதிவானது. இதனால், அங்கு உள்ள துங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுஉள்ளது. சிருங்கேரி சாரதா பீடத்துக்கு அருகே உள்ள காந்தி மைதானம் எனும் வாகன நிறுத்துமிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கோவில் தெரு இருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. துங்கா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கப்பே சங்கரா கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பக்தர்கள் ஆற்றின் படித்துறைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. முடிகேரி தாலுகாவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார், வெள்ளநீரில் கட்டுப்பாட்டை இழந்து அடித்து செல்லப்பட்டது. டிரைவர் காரில் இருந்து குதித்து உயிர் தப்பினார். பல்வேறு பாலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால், சிக்மகளூரு மாவட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.