பதிவு செய்த நாள்
12
ஜூலை
2024
01:07
திருவான்மியூர், பாம்பன் குமரகுருதாசர் கோவிலில், 36 ஆண்டுகளுக்கு பின் திருப்பணி முடிந்த நிலையில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது.
சென்னை, திருவான்மியூர், மயூரபுரம், பாம்பன் குமரகுருதாசர் கோவில் சர்வே எண்.172/2ல் மூன்று ஏக்கர், 11 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த சொத்தும், இதில் அமைந்துள்ள கோவிலும் நிர்வகிக்க ஸ்ரீமத்பாம்பன் சுவாமிகள், தமது உயிலில் தேஜோ மண்டல்சபா என்ற அமைப்பை ஏற்படுத்திஇருந்தார். அதன் காரியதரிசி குப்புசாமி என்பவரால், 1984ம் ஆண்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 1985ம் ஆண்டு முதல் மகா தேஜோ மண்டல தாரரால் இது திருக்கோவில் அல்ல சமாதி என வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிமன்ற தீர்ப்பில் பாம்பன் குமரகுருதாசர் கோவில் எனவும், அதன் நிர்வாகம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உறுதி செய்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதற்கிடையில், கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சின்னசாமி சமாதி நிலையத்தை, கோவில் நிர்வாகத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத உழவாரப்பணிக் குழு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலர் சட்ட விரோதமான ஆக்கிரமிப்பு செய்தனர்.
இது அறநிலையத்துறை சட்ட விதிமுறைகளுக்கு புறம்பானது என்பதால் அவர்களை சின்னசாமி சமாதி நிலையத்திலிருந்து வெளியேற்றி, பாம்பன் குமரகுருதாசர் கோவில் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது. இக்கோவில், 1988ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு விக்ரகங்கள் தானிய வாசத்தில் வைக்கப்பட்டிருந்தன. கருவறை மற்றும் மண்டபம் உபயதாரர் வாயிலாக கட்டப்பட்டன. நீதிமன்ற உத்தரவுபடி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, 36 ஆண்டுகளுக்கு பின், பாம்பன் குமரகுருதாசர் கோவில் கும்பாபிஷேகம் அறநிலையத்துறையால் விமரிசையாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.