பதிவு செய்த நாள்
15
நவ
2012
10:11
செஞ்சி: மேல்மலையனூருக்கு வந்த சென்னை பக்தர்கள், போதிய பஸ் வசதியின்றி, குளிரில் அவதிக்குள்ளாகினர்.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று தீபாவளி என்பதால், வழக்கத்தை விட கூட்டம் குறைவாக வரும் என கருதி, அரசு போக்குவரத்து கழகத்தினர், குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களையே இயக்கினர்.போக்குவரத்து துறையினர் எதிர்பார்த்ததை விட, கூட்டம் அதிகமாக இருந்தது. அத்துடன் முதல் நாள் வந்த கூட்டத்தின் ஒரு பகுதியினர், மேல்மலையனூரில் தங்கி இருந்து, மறுநாள் அமாவாசை, ஊஞ்சல் உற்சவத்தில் பங்கேற்றனர். நள்ளிரவு 1:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து, பக்தர்கள் ஊர் திரும்ப வந்தபோது, குறைந்த அளவிலேயே பஸ்கள் இருந்தன. இதனால், அனைத்து பஸ்களிலும் நெரிசல் ஏற்பட்டது.குறிப்பாக, சென்னை செல்வதற்கு பஸ்களின்றி, பக்தர்கள் அவதிப்பட்டனர். இவர்கள் பஸ் வசதி செய்து தரும்படி போலீசாரிடமும், போக்குவரத்து கழக அதிகாரிகளுடனும் கேட்டனர். இதையடுத்து, அதிகாலை 4:00 மணியளவில், கூடுதல் பஸ்களை வரவழைத்து, சென்னை பக்தர்களை அனுப்பி வைத்தனர். இதனால் கடும் குளிரில் பக்தர்கள், திறந்த வெளியில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.