பதிவு செய்த நாள்
15
நவ
2012
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, ஒரு கோடி ரூபாய் நன்கொடை செலுத்தினால், 20 ஆண்டு சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால், தரிசனத்துக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைத்து, வசதிகளை செய்து கொடுக்கும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. கோவிலை மேம்படுத்த நன்கொடை பெறப்படும் நிலையில், நன்கொடை கொடுக்கும் நபர்களுக்கு, சிறப்பு தரிசன அனுமதியை அறிமுகப்படுத்தி உள்ளது. கோவிலில் தினம், ஆறு கால பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையில் சிரமமின்றி தரிசனம் செய்ய, ஒரு கோடி நன்கொடை செலுத்துபவர்களுக்கு, பிளாட்டின அட்டை வழங்கப்படும். இந்த அட்டை மூலம், 20 ஆண்டுகளுக்கு அவரது குடும்பத்தைச் சேர்ந்த, 10 பேர், ஒரு நாளைக்கு இரண்டு கால பூஜைகளில், தரிசனம் செய்ய முன்னுரிமை அளிக்கப்படும்.மேலும், ஏழு லட்சம் ரூபாய் நன்கொடை செலுத்துபவர்கள், 20 ஆண்டுகளுக்கு, அவரது குடும்பத்தைச் சேர்ந்த, ஏழு பேருக்கு, ஒரு நாளைக்கு இரண்டு கால பூஜை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.இந்த அட்டை வைத்திருப்பவர்கள், திருவண்ணாமலை கோவில் மட்டுமின்றி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும், பூஜைகளில் கலந்து கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.