ஆடி கிருத்திகை; சுவாமிமலை முருகன் கோவிலில் தெப்ப திருவிழா.. பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2024 10:07
தஞ்சாவூர்; கும்பகோணம் அருகே சுவாமிமலை அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமைந்ததும், தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்து மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு பெற்றதுமான அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தங்ககவசம், வைரவேல் அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமிநாத சுவாமியை அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று மாலை நேத்திர புஷ்கரணியில் தெப்ப திருவிழா வேதபாராயணம், தேவாரப் பாராயணம், மேளக்கச்சேரியுடன் நடைபெற உள்ளது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டு டிரஸ்ட் சார்பில் மாலை அருளுரை வழங்கும் நிகழ்ச்சியும், சிவதாண்டவம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சுவாமிமலை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன.